மாகந்துரே மதுஷ்’ இறுதிச் சடங்கில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) கலந்து கொண்டதாகக் கூறும் படத்தைப் பகிர்ந்த முகப்புத்தக கணக்கு குறித்து விசாரணை நடத்துமாறு அரசாங்க தகவல் திணைக்களம் காவல்துறைமா அதிபரிடம் கோரிக்கை விடுத்துள்ளது. பாதாள உலகக்குழுத் தலைவர் மாகந்துரே மதுஷ் கடந்த 2020.08.20ஆம் திகதி காலை சுட்டுக்கொலை செய்யப்பட்டிருந்தார்.
திட்டமிட்ட குற்றச்செயல்களுடன் தொடர்புடைய மாகந்துரே மதுஷ் என்று அழைக்கப்படும் சமரசிங்க ஆராச்சிலாகே மதுஷ் லக்ஸித கொழும்பு, மாளிகாவத்தை பகுதியில் உள்ள வீட்டுத்திட்டமொன்றில் ஹெரோயின் போதைப்பொருள் மறைத்துவைக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினருக்கு மாகந்துரே மதுஷ் தகவல் வழங்கியிருந்தார். அந்த பகுதிக்கு அழைத்துச் சென்ற போது காவல்துறைக்கும் பாதாளகுழுவினருக்கும் இடையில் இடம்பெற்ற பரஸ்பர துப்பாக்கி பிரயோகத்தின் போது மதுஷ் சுட்டுக் கொல்லப்பட்டார்.
போதைப்பொருள் கடத்தல்காரன் ‘மாகந்துரே மதுஷ்’ இன் இறுதிச் சடங்கில் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க கலந்து கொண்டதாகக் கூறும் புகைப்படம் ஒன்று முகப்புத்தம் ஒன்றில் பதிவிடப்பட்டுள்ளது. படத்தை பகிர்ந்த முகப்புத்தக கணக்கு குறித்து விசாரணை நடத்துமாறு அரசாங்க தகவல் திணைக்களம், பதில் காவல்துறை மா அதிபரிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
தரங்க லக்மால் என்ற நபரால் இந்தப் படம் முகப்புத்தகத்தில் பரப்பப்பட்டதாகவும் அரசாங்கத தகவல் திணைக்களம் பதில் காவல்துறை மா அதிபருக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நபர் தவறான தகவல்களைப் பகிர்ந்துள்ளதால், சமூக ஊடகங்களில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது என்றும் திணைக்களம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது. இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தி தேவையான சட்ட நடவடிக்கைகளை எடுக்குமாறு பதில் காவல்துறை மா அதிபரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.