நரேந்திர மோடி(narendra modi) எதிர்வரும் ஏப்ரல் மாதம் இலங்கைக்கு (sri lanka) பயணம் மேற்கொள்ள வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இலங்கை வட்டார தகவல்களின்படி, இந்தப் பயணம் இன்னும் வலுவடைந்து வருவதாகவும், ஏப்ரல் 5 ஆம் திகதி அளவில் பயணம் இடம்பெறக்கூடும் என்றும், இணைப்பு மற்றும் பொருளாதார உறவுகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து கவனம் செலுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
மோடியின் பயணத்திற்கான அழைப்பை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க(anura kumara dissanayake) 2024 டிசம்பர் நடுப்பகுதியில் புதுடில்லிக்கு மேற்கொண்ட இரண்டு நாள் பயணத்தின் போது விடுத்திருந்தார்.
2024 செப்டம்பரில் அநுர குமார, ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர், முதல் வெளிநாட்டுப் பயணம் இந்தியாவாக அமைந்தமை குறிப்பிடத்தக்கது.
பயணத்தின் போது, ஏழு கடன் திட்டங்களுக்கான 20 மில்லியன் டொலர் கொடுப்பனவுகளை மானியங்களாக மாற்றுவதாக இந்திய அரசாங்கம் அறிவித்தது, இது இலங்கையின் கடன் சுமையைக் குறைத்தது.
2022 ஆம் ஆண்டு நாடு எதிர்கொண்ட பொருளாதார நெருக்கடியின் போது டில்லி கொழும்புக்கு அளித்த 4 பில்லியன் டொலர் மதிப்பிலான ஆதரவை அடிப்படையாகக் கொண்டு அறிவிப்பு உருவாக்கப்பட்டுள்ளது.