புறக்கணிக்கப்படும் தமிழ் மக்களின் அரசியல் தீர்வு

#image_title

தமிழ் மக்களுக்கான அரசியற் தீர்வைக் காலம் தாழ்த்தாது மக்களுக்கு முன்வைக்க வேண்டும் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஊடகப் பேச்சாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் (M. A. Sumanthiran) தெரிவித்துள்ளார்.மட்டக்களப்பு (Batticaloa) – களுவாஞ்சிக்குடியில் (16.02.2025) இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்ட தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பின் போதே குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில், “இந்த மத்திய குழு கூட்டத்தில், உள்ளுராட்சி மன்றத் தேர்தலை எவ்வாறு சந்திப்பது என்பது பற்றி நீண்ட கலந்துரையாடல் இடம்பெற்றது. கடந்த ஓரிரு வருடங்களுக்கு முன்னர் இதே இடத்தில் இடம்பெற்ற கூட்டத்தின் போது இந்தத் தேர்தல் முறையின் கீழ் தனித்தனியாகப் போட்டியிடுவது பற்றி உத்தேச தீர்மானமொன்றை கட்சிகளுக்குத் தெரியப்படுத்தியிருந்தோம். தனித்துப் போட்டியிட்டாலும் நாங்கள் சேர்ந்து ஆட்சி அமைப்பதற்கான புரிந்துணர்வொன்றை மற்றைய கட்சிகளுடன் ஏற்படுத்த முடியுமா என்ற விதத்திலும் ஆராய்ந்தோம்.

தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைமைத்துவங்களோடு பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்கு தலைவருக்கும், செயலாளருக்கும் அனுமதியை வழங்கியிருக்கின்றது. இது தொடர்பில் நாங்கள் மேலும் கூட வேண்டுமாக இருந்தால் அரசியற் குழுவினுடாக தீர்மானங்களை மேற்கொள்ளலாம் என்ற தீர்மானமும் எடுக்கப்பட்டுள்ளது. தமிழ் மக்களுக்கு எவ்வாறான அரசியல் திருத்தம் வேண்டும் என்பது தங்களுக்குத் தெரியும், தங்களுக்கு மக்கள் ஆணை இருப்பதாக அரசாங்கம் சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள்.

நாடுபூராகவும் மக்கள் ஆணை வழங்கியிருக்கின்றார்கள். வடக்கிலும் தமிழ் மக்கள் அவர்களுக்கு ஆணை வழங்கியிருப்பதாகச் சொல்லுகின்றார்கள். அண்மைக் காலமாக அரசாங்கத்தின் முக்கிய பிரதிநிதிகள் குறிப்பாக அமைச்சரவைப் பேச்சாளர் நலிந்த ஜயதிஸ்ஸ தற்போது பொருளாதாரப் பிரச்சனை தான் முக்கியமானது, அதனையே நாங்கள் கவனிப்போம். அரசியலமைப்பு பற்றி பின்னர் பார்த்தக் கொள்வோம் என்று கூறியிருக்கின்றார். வேறு சிலர் மூன்று வருடங்களின் பின்பே அரசியலமைப்பு பற்றி பேசலாம் என்று சொல்லியிருக்கின்றார்கள்.

நாங்கள் ஏற்றுக் கொள்ளவே முடியாது. இந்த நாட்டின் பிரதான பிரச்சினை தமிழ்த் தேசியப் பிரச்சினை. வேறு எந்தப் பிரச்சினை சம்மந்தமாகவும் இந்த நாட்டிலே முப்பது ஆண்டுகள் யுத்தம் நடைபெறவில்லை. பொருளாதாரப் பிரச்சினைக்கு அடிகோலியாக இருப்பதும் இந்தத் தமிழ்த் தேசியப் பிரச்சினையே. எனவே இதனை நாங்கள் விட்டுவிட்டு பொருளாதாரப் பிரச்சினையை அவர்கள் முதலில் கவனிப்போம் என்று சொல்வதை நாங்கள் ஏற்றுக் கொள்ளவே முடியாது.

நாங்கள் அரசாங்கத்திடம வலிந்து கோருவது நீங்கள் மக்களுக்காக வழங்குவதென வாக்குறுதி அளித்த உங்களிடத்தில் இருக்கின்றது என்று சொல்லுகின்ற அரசியற் தீர்வைக் காலம் தாழ்த்தாது முதலில் மக்களுக்கு முன்வைக்க வேண்டும். அரசியற் தீர்வு இருக்கின்றதென்று சொல்லுகின்றீர்கள். அதனை காலம் தாழ்த்தாது நீங்கள் முன்வையுங்கள். தமிழ் மக்களின் பிரதான கட்சியான தமிழரசுக் கட்சியின் இனப்பிரச்சினை தீர்வு தொடர்பான நிலைப்பாடு சகலருக்கும் தெரியும்.

இந்தக் கட்சி ஆரம்பிக்கப்பட்டதில் இருந்து அரசியற் தீர்வு எவ்வாறானதாக இருக்க வேண்டும் என்று சுட்டிக்காட்டி வந்துள்ளது. எனவே இதில் நாங்கள் எங்களது நிலைப்பாட்டை புதிதாக முன்வைக்க வேண்டிய அவசியம் கிடையாது.

Exit mobile version