ஐ.எம்.எப் நிபந்தனைகளின் தொடர்ச்சி ரணிலின் கட்டளையா!

#image_title

சர்வதேச நாணய நிதியத்துடன் ஏற்றுக்கொண்ட நிபந்தனைகள் எதனையும் அரசாங்கம் திருத்தம் செய்யவில்லை. பயமா அல்லது தெரியாதா முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கட்டளையா என்பது தெரியவில்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிம் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் (19) நடைபெற்ற 2025ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தின் மீதான இரண்டாம் நாள் விவாதத்தில் உரையாற்றுகையில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் உரையாற்றியதாவது,”அரசாங்கம் சிறந்த முறையில் செயற்படும் என்று நாங்கள் எதிர்பார்த்தோம். இருப்பினும், அரசாங்கமும் கடந்த காலங்களை போன்றே செயற்படுகிறது. சர்வதேச நாணய நிதியத்தின் அனைத்து பரிந்துரைகளும் சிறந்தது என்று நாங்கள் குறிப்பிடவில்லை. நாட்டை பொருளாதார ரீதியில் முன்னேற்றமடைய செய்யும் தேவை நாணய நிதியத்துக்கு கிடையாது.

நாணய நிதியத்தின் நிபந்தனைகளுடன் முன்னேற்றமடைந்த நாடுகளும் உள்ளன, வீழ்ச்சியடைந்த நாடுகளும் உள்ளன. ஆகவே, நாணய நிதியத்தின் வழிகாட்டலுடன் எமக்கான பொருளாதார திட்டங்களை நாமே வகுத்துக்கொள்ள வேண்டும். 2025ஆம் ஆண்டு வரவு – செலவுத் திட்டம் மக்களுக்கானது என்று குறிப்பிடப்படுகிறது. உண்மையில் இதனை மக்களை ஏமாற்றும் வரவு செலவுத் திட்டம் என்றே குறிப்பிட வேண்டும். மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளார்கள். மக்களிடம் உண்மையை குறிப்பிடுங்கள்.

அரச சேவையாளர்களின் சம்பள அதிகரிப்புக்கு 345 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. 15 ஆயிரம் ரூபாய் அதிகரிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது. ஆனால், எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரையான காலப்பகுதியில் 5900 ரூபாவே கிடைக்கப்பெறும். அரச சேவையில் சுமார் 14 இலட்சம் உத்தியோகத்தர்கள் உள்ளார்கள். அவர்களில் 51 சதவீதமானோர் கீழ் நிலை உத்தியோகத்தர்களாவர். மறுபுறம் தனியார் துறையில் 60 இலட்சம் பேர் உள்ளார்கள். இவர்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு இந்த வரவு – செலவுத் திட்டத்தில் நடைமுறைக்கு சாத்தியமான திட்டங்கள் ஏதும் குறிப்பிடப்படவில்லை.

மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு எவ்வித தீர்வும் முன்வைக்கப்படவில்லை. அரிசி மற்றும் தேங்காய் மாபியாக்களை தோற்கடிப்பதில் அரசாங்கம் தோல்வியடைந்துள்ளது.”என கூறியுள்ளார்.

Exit mobile version