நாடாளுமன்ற உறுப்பினர்களான சாணக்கியன் மற்றும் அர்ச்சுனா இராமநாதனால் நாடாளுமன்றில் (4) அமைதியின்மை ஏற்பட்டுள்ளது. மட்டக்களப்பில் வாள் வெட்டு சம்பவங்கள் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் சபையில் கேள்வி எழுப்பியபோது அவரின் ஒலிவாங்கி நிறுத்தப்பட்டதால் சச்சரவு ஏற்பட்டது. அவர் கருத்து தெரிவிக்க முயன்ற போது, சபாநாயகர் குறுக்கிட்டு, “இது ஒழுங்குப் பிரச்சினை அல்ல, எனவே சபை ஒத்திவைப்பு பிரேரணையின் போது இதனை கொண்டு வரலாம்” என்றார்.
இது ஒரு தேசிய பிரச்சினை அல்ல என்று சபாநாயகர் கூறியதால் சபையில் குழப்பநிலை உண்டானது.
நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவும் திருகோணமலை வைத்தியசாலையில் வைத்தியர் ஒருவர் நோயாளர்களை தாக்கிய சம்பவம் தொடர்பில் சபையில் கேள்வி எழுப்ப முற்பட்ட நிலையில் சபாநாயகர் அனுமதி மறுத்திருந்தார். எங்களுடை பிரச்சினையை பேச அனுமதி மறுக்கப்படுகின்றது என்று குழப்பநிலை உருவானது.
எதிர்க்கட்சி தலைவர் தலையிட்டு நிலையியல் கட்டளைக்கு அமைய நாடாளுமன்ற உறுப்பினர்களான சாணக்கியன் மற்றும் அர்ச்சுனாவுக்கு ஒவ்வொரு நிமிடங்களை பெற்றுக் கொடுக்குமாறு கோரிய நிலையில் அவர்களுக்கான ஒரு நிமிடம் வழங்கப்பட்டது. பிரச்சினை பெரிதானதால் சபாநாயகர் “சிட் டவுண்” என கோபத்தில் கத்தினார்.