உலகம்

வரிகளால் மிரட்டும் ட்ரம்ப் அரசாங்கம்

அமெரிக்காவில் (United States) தயாரிக்கப்படும் F-35 போர் விமானங்களை வாங்கும் முடிவை கனடாவின் அரசாங்கம் கைவிடும் என ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தகவலை கனேடிய பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளமையால், இது உறுதி செய்யப்பட்ட முடிவென்றே தெரிவிக்கப்படுகின்றது.

அமெரிக்க F-35 போர் விமானங்களை வாங்குவதற்கான சாத்தியக்கூறுகளை மறுபரிசீலனை செய்வதாக ஐரோப்பிய நாடான போர்த்துகல் கூறிய இரண்டு நாட்களுக்குப் பிறகு கனடாவின் முடிவு வெளியாகியுள்ளது. ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) தொடங்கிய வரிப் போர் மற்றும் அட்லாண்டிக் கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையிலான அவரது நடவடிக்கைகள் மீது சர்வதேச அளவில் கோபம் அதிகரித்து வரும் நிலையிலேயே போர்த்துகல் முடிவுக்கு வந்துள்ளது.

கனேடிய பொருட்களுக்கும் 25 சதவீத வரிகளை விதித்து அமெரிக்காவின் வடக்கு அண்டை நாடான ட்ரம்ப் தடுமாற வைத்ததுடன் கனடாவை 51 ஆவது அமெரிக்க மாகாணமாக மாற்ற பரிந்துரைப்பதன் மூலம் தொடர்ந்து கனேடியர்களை கோபப்படுத்தியுள்ளார். கனடாவில் புதிதாக பொறுப்பேற்ற பிரதமர் மார்க் கார்னி, அமெரிக்கா உடனான F-35 ஒப்பந்தம், தற்போதுள்ள நிலையில் கனடாவிற்கு சிறந்த முதலீடா என்பதை தீர்மானிக்க பாதுகாப்பு அமைச்சகத்திடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

கனடாவின் தேவைகளை சிறப்பாக பூர்த்தி செய்யக்கூடிய வேறு வழிகள் இருந்தால் அதையும் பரிந்துரைக்கவும் அவர் கோரியுள்ளார். 2023 ஜனவரி மாதம், அமெரிக்காவின் மிகப்பெரிய பாதுகாப்பு நிறுவனமான லாக்ஹீட் மார்டினுடன் மொத்தம் 19 பில்லியன் கனேடிய டொலர் மதிப்பிலான 88 F-35 போர் விமானங்களை வாங்குவதற்கான ஒப்பந்தத்தில் கனேடிய அரசாங்கம் கையெழுத்திட்டது.

16 விமானங்களுக்கான தொகையை ஏற்கனவே கனேடிய நிர்வாகம் செலுத்தியுள்ள நிலையில் அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ள கனேடிய நிர்வாகம், அமெரிக்கா உடனான இந்த ஒப்பந்தம் ரத்து செய்யப்படவில்லை, ஆனால், மாறிவரும் சூழலைக் கருத்தில் கொண்டு நாம் நமது முடிவுகளை முன்னெடுக்க வேண்டும். ஒப்பந்தம் அதன் தற்போதைய வடிவத்தில் கனேடியர்கள் மற்றும் கனேடிய ஆயுதப் படைகளின் நலன்களுக்காக இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

போர்த்துகல் நிர்வாகமும், அமெரிக்க F-35 போர் விமானங்கள் மற்றும் ஐரோப்பிய விமானங்கள் இரண்டையும் ஆய்வு செய்து வருவதாக குறிப்பிட்டுள்ளது. கனடா மற்றும் போர்த்துகல் நிர்வாகங்கள் F-35 போர் விமானங்கள் தொடர்பில் ட்ரம்ப் நிர்வாகத்திற்கு கடும் அழுத்தம் அளிக்கக் கூடும் என தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related Posts

Leave A Reply

Your email address will not be published. Required fields are marked *