வேலையற்ற பட்டதாரிகள் தனியார் துறையிலும் வேலைவாய்ப்புக்களைப் பெற முன்வரவேண்டும் என தொழில் அமைச்சர் பேராசிரியர் அனில் ஜயந்த பெர்னாண்டோ (A. Anil Jayanta Fernando) தெரிவித்துள்ளார். ஓய்வூதியம் வேண்டும் என்பதற்காக அரச துறையை மட்டும் நம்பியிருக்காதீர்கள் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார். மேலும் ,ஓய்வூதியம் வேண்டும் என்பதற்காகப் பட்டதாரிகள் பலர் அரச துறையில் வேலைவாய்ப்பைக் கோரி நிற்கின்றனர். இதற்காகச் சில இடங்களில் பட்டதாரிகள் வீதிகளில் இறங்கிக் கூடப் போராடுகின்றனர்.
வேலையற்ற பட்டதாரிகள் என்று அடையாளப்படுத்தும் அவர்கள், முதலில் தனியார் துறையில் குவிந்திருக்கும் வேலைவாய்ப்புக்களைப் பெற முன்வரவேண்டும். நாட்டில் இளையோர் அனைவருக்கும் வேலைவாய்ப்புக் கிடைக்க வேண்டும். அரச, தனியார் துறைகளில் வேலை செய்ய வேண்டும். இதில் அரசு உறுதியான நிலைப்பாட்டில் இருக்கின்றது. ஆனால், அரச துறையில் மாத்திரம் வேலைவாய்ப்பு வேண்டும் என்று கோரி இளைஞர், யுவதிகள் பிடிவாதமாக இருக்கக்கூடாது.
அரச துறையில் வேலைவாய்ப்பு இல்லை. தனியார் துறைகளில் அதிகமான வேலைவாய்ப்புக்கள் காத்திருக்கின்றன. எனவே, இன்றைய இளையோர் தனியார் துறையிலும் வேலை செய்ய முன்வரவேண்டும். வீதிகளில் இறங்கிப் போராடுவதில் என்ன நியாயம் இருக்கின்றது.படித்தவர்கள் சிந்தித்துச் செயற்பட வேண்டும். அனைவருக்கும் அரச துறையில் வேலை கிடைக்கும் என்று நம்பியிருக்கக்கூடாது என்றார்.