இந்தியாவில் பயணிகளின் பயண தேவையை தீர்த்து வைப்பதில் ரயில் துறைக்கு பங்கு உள்ளது. தொலை தூர பயணத்திற்கும், உள்ளூர் பயணத்திற்கும் ரயிலில் பயணம் செய்யவே விரும்புவார்கள். குறைந்த கட்டணம், பாதுகாப்பான பயணம், அதிவேகத்தில் செல்லக் கூடியது என்பதால் சாமானிய மக்கள் கூட ரயில் பயணத்தை விரும்புகிறார்கள்.
இந்தியாவில் அதிவேகத்தில் செல்லும் திறன் கொண்ட ரயில்களை இயக்குவதில் ரயில்வே கவனம் செலுத்துகிறது. பயணிகளின் பயண நேரம் மிச்சமாகும் என்பதால் அதிவேகத்தில் செல்லும் ரயில்களையே அதிகம் நாடுகிறார்கள்.
இந்தியாவிலேயே மிகவும் மெதுவாக இயங்கக் கூடிய ரயிலாகவும் பயணிகள் விரும்பும் ஒரு ரயிலாகவும் ஒரு ரயில் உள்ளது. தமிழகத்தில் தான் அந்த ரயில் ஒடுகிறது. தமிழகத்தின் நீலகிரியில் ஓடும் மலை ரயில் தான் இந்தியாவிலேயே மிகவும் மெதுவாக செல்லும் ரயில் ஆகும்.
சுற்றிலும் இயற்கை காட்சிகளுக்கு நடுவே ரம்மியமான சூழலில் இந்த ரயில் பயணிப்பதால் இந்த ரயிலில் பயணம் செய்வதற்காகவே சுற்றுலா பயணிகள் படையெடுக்கிறார்கள். யுனெஸ்கோவால் பாரம்பரிய சின்னமாகவும் இந்த ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் இருந்து ஊட்டி வரை ரயில் செல்கிறது. வெறும் 46 கிலோ மீட்டர் தூரத்தை பயணிக்க 5 மணி நேரம் ஆகிறது. ரயில் பல சுரங்கங்கள் மற்றும் 100க்கும் மேற்பட்ட மேமபாலங்கள் வழியாக பயணிக்கிறது. மலைகள், தேயிலை தோட்டங்கள், வனப்பகுதிகள் என கண்ணுக்கு விருந்தளிக்கும் பசுமையான பாதையில் இந்த ரயில் பயணிக்கிறது.