எதிர்க்கட்சி தலைவர் அலுவலகம் மக்கள் மன்ற அலுவலகமாக மாற்றப்பட்டு தீர்வுகளை வழங்கும் வேலைத்திட்டத்தை ஆரம்பிப்போம் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் தெரிவித்துள்ளார். ஐக்கிய மக்கள் சக்தியின் அவிசாவளை தேர்தல் தொகுதியில் மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போது தெரிவித்துள்ளார்.
மேலும் குறிப்பிடுகையில்,”இன்று நாட்டில் மக்களை வாழ வைக்க முடியாத அரசாங்கமே காணப்படுகின்றது. தீர்வுகளை எதிர்பார்த்து தேசிய மக்கள் சக்தியை மக்கள் ஆட்சியில் அமர்த்தினாலும் பழைய பாணியிலேயே ஆட்சியும் அமைந்துள்ளது. மக்கள் ஆணைக்கு நியாயத்தை நிலைநாட்ட முடியாது ஆட்சியிலிருந்து என்ன பயன்? எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகம் மக்கள் மன்ற அலுவலகமாக மாற்றப்பட்டு தீர்வுகளை வழங்கும் வேலைத்திட்டத்தை ஆரம்பிப்போம்.
உணவுப் பொருட்களை வழங்க முடியாத அரசு எவ்வாறு மக்களை வாழ வைக்கப்போகிறது? மலிவு விலையில் தேங்காய் அரிசி மற்றும் உப்பு வாங்க முடியாத நிலை நாட்டில் ஏற்பட்டுள்ளது. ஆட்சியில் இருப்பவர்கள் எதிர்க்கட்சியில் இருந்தபோது நெல்லுக்கு 150 ரூபா உத்தரவாத விலையைத் தருவதாக கூறினர். ஆனால் இன்று அவர்கள் வயல்வெளிகளுக்குச் சென்று விவசாயியை சந்திப்பதற்கே பயப்படுகின்றனர்.
பொய்களைக் கூறி மக்களை ஏமாற்றும் செயல்களில் ஈடுபட்டு, ஆட்சிக்கு வந்த பின்னர் விவசாயிகளை கைவிட்டுள்ளனர். கூட்டுறவு சங்கங்களில் இருந்து கடன் வாங்குவது அதிகரித்துள்ளது. மக்களின் வருமான மூலங்கள் சுருங்கிபோயுள்ளன. நுண், சிறிய மற்றும் நடுத்தர தொழில்முனைவோர் ஜனாதிபதி செயலகத்துக்கு சென்ற போதும் அவர்களுக்கு உரிய தீர்வுகள் எதுவும் வழங்கப்படவில்லை.
மக்களை நிர்க்கதியாக்கும் அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு எதிராக முன்நிற்பது மட்டுமன்றி பாரபட்சம் மற்றும் அரசியல் பழிவாங்கல்களுக்கு ஆளாவோருக்கு நீதியை நிலைநாட்டும் வேலைத்திட்டமொன்றை ஐக்கிய மக்கள் சக்தி முன்னெடுக்கும். சேவை செய்ய வேண்டும் என்றே மக்கள் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை இந்த ஆட்சியாளர்களுக்கு பெற்றுத் தந்தனர். பழைய பாணியிலேயே இவர்களும் ஆட்சி நடத்தி வருகின்றனர். மக்கள் ஆணைக்கு இந்த அரசாங்கம் நியாயத்தை நிலைநாட்ட வேண்டும். காலம் தாழ்த்தல், இழுத்தடிப்பு தீர்வாகாது. மக்கள் உங்களிடமிருந்தும் எதிர்பார்க்கவில்லை. பிரச்சினைகள் எழும் போது சமாளிப்புக்கு பல விடங்களை முன்வைத்து வருகிறீர்கள். எடுத்த நடவடிக்கைகள் ஒன்றுமில்லை. அதிகாரம் உங்கள் கைவசமே காணப்படுகின்றது.”என கூறியுள்ளார்.