புத்தளத்தில் வீடொன்றில் யுவதி மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நோய்வாய்ப்பட்ட நிலையில் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்ட போது ஏற்கனவே உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
கலடிய பகுதியைச் சேர்ந்த 19 வயதான சாமுதி விதர்ஷனா என்ற யுவதியே உயிரிழந்துள்ளார். புத்தளம் ஆனந்தா தேசிய பாடசாலையின் மாணவியான குருணாகலிலில் உயர்கல்வி டிப்ளோமா கல்வி பயின்று வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
வீட்டிற்கு மூத்த பிள்ளையான விதர்ஷனா, அன்றையதினம் மரக்கறி ரொட்டி உட்கொண்ட நிலையில் உறங்க சென்றதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர். காலையில் மாணவியின் அறைக்கு சென்ற தாய், மகளின் நிலையை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மயக்க நிலையில் இருந்த மகளை புத்தளம் ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர். எனினும் ஏற்கனவே உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். மாணவியின் மரணம் குறித்து புத்தளம் பொலிஸார் விரிவான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.