அரசாங்கம் தொழிற்சங்கங்களுக்கு அஞ்சுவதாகவும், எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு தயக்கம் காட்டுகிறது என்றும் அநுர குமார திஸாநாயக்கவை ஜனாதிபதியாக்க உதவி செய்தவர்களே குற்றச்சாட்டுகளை வெளிப்படுத்துவதாக முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார். சுங்கத்திலிருந்து சர்ச்சைக்குரிய 323 கொள்கலன்கள் வெளியில் விடுவிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் நாடாளுமன்றில் கருத்து தெரிவிக்கும்போதே இதனை கூறியுள்ளார்.
மேலும் , “323 கொள்கலன்கள் வெளியில் விடுவிக்கப்பட்டுள்ளமை தொடர்பில்எங்களை குற்றம் சாட்டாமல் வெளிப்படுத்திய சுங்க தொழிற்சங்க தலைவர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் விசாரணை மேற்கொள்ள வேண்டும். சுங்க தொழிற்சங்க கூட்டணி ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பி இருக்கிறது.
சுங்க பணிப்பாளர் நாயகம், சுங்க கொள்கலன் விடுவிப்பு ஒழுங்குவிதிகளுக்கு முரணாக செயற்பட்டுள்ளார். சுங்கத்தில் இருந்து கட்டாயமாக பரீட்சிக்க வேண்டும் என சுங்க முகாமைத்துவ பிரிவால் அடையாளம் காணப்பட்டு சிவப்பு அட்டை ஒட்டப்பட்ட 323 கொகலன்கள் விடுவிக்கப்பட்டுள்ளதாக சுங்க அதிகாரிகளின் சங்கத்தின் தலைவர் ஜீ.ஜே, சன்ஜீவ கையெழுத்திட்டு கடிதத்தை அனுப்பியுள்ளார்.
சுங்கத்தில் இருந்து 323கொள்கலன்கள் பரீட்சிக்கப்படாமல் விடுவிக்கப்பட்டுள்ளதாக நாங்கள் பொய் தெரிவிப்பதாக அமைச்சர் தெரிவிக்கிறார். 323 கொள்கலன்கள் விடுவிக்கப்பட்டுள்ளதாக நாங்கள் தெரிவிக்கவில்லை. சுங்க அதிகாரிகளின் சங்கத்தின் தலைவர் ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதத்திலேயே தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிவி்த்திருப்பது பொய் என்றால் அவரை கைதுசெய்து விசாரணை செய்யுங்கள். அதனை விடுத்து எங்களை குற்றம் சாட்ட வேண்டாம்” என்றார்.