இலங்கை

இசைப்பிரியாவின் படுகொலைக்கும் நீதி வேண்டும்!

ஊடகவியலாளர் லசந்த படுகொலைக்கு நீதியை பெற்றுத்தர அநுர தரப்பு உறுதியளித்ததை போல நிமலராஜன் தொடக்கம் இசைப்பிரியா(Isaipriya) வரையான ஊடகவியலாளர்களுக்கும் நீதியையும் பெற்றுக் கொடுப்போம் என பிரதமர் உறுதிப்படுத்துவதுடன் செயல் வடிவத்தையும் காட்ட வேண்டும் என வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர் லசந்த படுகொலைக்கு நீதி வேண்டி அவரின் மகள் அனுப்பிய கடிதத்தின் அடிப்படையில் நீதியைப் பெற்றுக் கொடுப்பதில் உறுதியாக இருப்போம் என பிரதமர் ஹரிணி அமரசூரிய(Harini Amarasuriya) நாடாளுமன்றத்தில் தெரிவித்தமை தொடர்பில் தெரிவிக்கும்போதே கூறியுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில்,

ஊடகத்துறையில் பணியாற்றியதுடன் கலைத்துறையிலும் சிறப்பான படைப்புக்களை வழங்கிய இசைப்பிரியா இறுதிப் போரில் முள்ளிவாய்க்கால் பகுதியில் மே17ஆம் திகதி வட்டுவாகலில் இராணுவத்திடம் சரணடைந்த பின் படுகொலை செய்யப்பட்டார் என்பதற்கு சனல் 4 ஊடகத்தின் ஆதாரங்கள் வெளிவந்தன.

சரணடைந்த ஊடகவியலாளன் படுகொலை செய்யப்பட்ட முறை மனித குலமே வெட்கித் தலை குனியும் அளவுக்கு அசிங்கமானது.

பிரதமர் அவர்களே நீங்களும் பெண் என்ற வகையில் இசைப்பிரியாவுக்கான நீதியை பெற்றுக் கொடுங்கள்.

இறுதிப் போரில் இசைப்பிரியாவின் கணவன் சிறிராம் கொல்லப்பட்டதுடன் மகள் அகல்யா பிறந்து இரண்டு மாதங்களில் மருத்துவ வசதியும் பால்மாவும் இல்லாமையால் புதுமாத்தளனில் இறந்தார்.

அத்தனை துயரங்களை சுமந்து கொண்டு சரணடைந்த இசைப்பிரியா படுகொலை செய்யப்பட்டுள்ளார்.  இவருக்கான நீதி கிடைக்குமா? என குகதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

Related Posts

Leave A Reply

Your email address will not be published. Required fields are marked *