உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய பிரதான சூத்திரதாரி யார் என்பது நன்கு தெரியும் என பொதுபல சேனா இயக்கத்தின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். ஊடகங்களிடம் அவர் தெரிவித்துள்ளார்.
பிரதான சூத்திரதாரி யார் என்பது தெரியும் என்பதனை மிகவும் பொறுப்புடன் கூறுவதாகவும் அதனை ஊடகங்களிடம் பகிர்ந்து கொள்ள தயாரில்லை எனவும் தெரிவித்துள்ளார். தற்கொலைத் தாக்குதலின் பிரதான சூத்திரதாரி குறித்து ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மற்றும் பாதுகாப்பு பிரதானிகளிடம் வெளிப்படுத்த உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
பின்னர் ஊடகங்களிடம் விபரங்களை வெளியிட உள்ளதாகத் தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பற்றிய சகல விடயங்களையும் அம்பலப்படுத்துவதற்கு தயார் என அவர் குறிப்பிட்டுள்ளார். உயிர்த்த ஞாயிறு தினமன்று இடம்பெற்றதனால் இந்த தாக்குதல் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் என அழைக்கப்படுவதாகவும், பௌர்ணமி தினத்தில் இடம்பெற்றிருந்தால் பௌர்ணமி தாக்குதல் என அழைக்கப்பட்டிருக்கும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
தாக்குதலின் பிரதான சூத்திரதாரி யார், அவர் யார் யாருடன் தொடர்பு பேணினார், அவர் எங்கு தங்கியிருந்தார், அவர் சஹ்ரானை பயிற்றுவித விதம் உள்ளிட்ட அனைத்து விடயங்களும் தமக்கு தெரியும் என ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். அனைத்து விடயங்களையும் நாட்டு மக்களுக்கு அம்பலப்படுத்த தயார் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.